சூடானில் இருந்து மேலும் 754 பேர் இந்தியா வருகை- மத்திய அரசால் இதுவரை மீட்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 1360 !
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து மேலும் 754 பேர் இந்தியா வந்து சேர்ந்தனர். இதன் மூலம் சூடானில் இருந்து இதுவரை நாடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1360 ஆக உயர்ந்துள்ளது.

By : Karthiga
ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டுக்கு போர் வெடித்துள்ளது. அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். உள்நாட்டு போர் உக்கிரமடைந்துள்ளதால் அங்கு வசித்து வரும் வெளிநாட்டு குடிமக்களை அந்தந்த நாடுகள் தொடர்ந்து மீட்டு வருகின்றன .அதன்படி சூடானில் வசித்து வரும் சுமார் நான்கு ஆயிரம் இந்தியர்களை மீட்பதற்கு 'ஆபரேஷன் காவேரி' என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை மத்திய அரசு கடந்த 24ஆம் தேதி தொடங்கியது.
இதற்காக விமானப்படை விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் களம் இறக்கப்பட்டுள்ளன .உள்நாட்டுப் போர் நடந்து வரும் தலைநகர் 'கார்தூம்' உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பஸ்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர் . அங்கிருந்தவர்கள் விமானப்படை விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானம், விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
சூடானிலிருந்து இவ்வாறு மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் அடங்கிய முதல் குழுவினர் கடந்த 26 ஆம் தேதியில் டெல்லி வந்தடைந்தனர் .அடுத்ததாக 246 இந்தியர்களை விமானப்படை விமானம் நேற்று முன்தினம் ஜெட்டாவிலிருந்து மும்பை கொண்டு வந்து சேர்த்தது. இதைத் தொடர்ந்து மற்றொரு விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தில் 392 இந்தியர்கள் அடங்கிய மூன்றாவது குழுவினர் நேற்று டெல்லியை அடைந்தனர் .இதைப்போல மேலும் 362 பேரைக் கொண்ட நான்காவது குழுவுடன் மற்றொரு விமானம் நேற்று பெங்களூருக்கு வந்து சேர்ந்தது. இதன் மூலம் சூடானில் சிக்கியிருந்த 1160 இந்தியர்கள் இதுவரை நாடு திரும்பி உள்ளதாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் இந்த 'ஆபரேஷன் காவேரி' நடவடிக்கைக்காக ஜெட்டா, சூடான் துறைமுகம் மற்றும் கார்தூமில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றில் தனித்தனி கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன . இந்த மையங்களுடன் மத்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து தொடர்பு கொண்டு இந்த பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது .இதனால் இந்த மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருவதாக வெளியுறவு அமைச்சராக அதிகாரிகள் தெரிவித்தனர்.
