ஏழைகள் நடுத்தர மக்களின் கனவுகளை நிறைவேற்றும் பட்ஜெட்- பிரதமர் மோடி கருத்து
ஏழைகள் நடுத்தர மக்களின் கனவுகளை நிறைவேற்றும் பட்ஜெட் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
By : Karthiga
2023 - 24 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு அமிர்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த முதல் பட்ஜெட் வளர்ந்த இந்தியாவுக்கான அடித்தளம் அமைக்கிறது. நடுத்தர மக்கள், விவசாயிகள் மற்றும் லட்சிய சமூகத்தினரின் கனவுகளை இந்த பட்ஜெட் நிறைவேற்றும். வளமான மற்றும் வளர்ந்த இந்தியாவின் கனவுகளை நினைவாக்க நடுத்தர சமூகம் ஒரு பெரிய சக்தியாகும் .
இந்த சமூகத்தை மேம்படுத்துவதற்கு எங்கள் அரசு பல முடிவுகளை எடுத்துள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் வெற்றியை விவசாயத்துறையிலும் பிரதிபலிக்க வேண்டும். அதற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பை அமைப்பதற்கான திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது கிராம பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களை மையமாக மாற்றும். உள்கட்டமைப்பில் முன்னே எப்போதும் இல்லாத வகையில் ரூபாய் 10 லட்சம் கோடி முதலீடு செய்வது வளர்ச்சிக்கு வேகத்தையும் புதிய ஆற்றலையும் தரும் .இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.