சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது - மூன்று பேருக்கு பாதிப்பு
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அது இந்தியாவுக்குள் நுழைந்து மூன்று பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
By : Karthiga
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம் ஒமைக்ரானின் துணை வைரசான பி.எப் 7 துணை வைரஸ்கள் தான். இந்த வைரஸ் பி.ஏ 5.2.1.7 வைரஸ் போன்று தான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம் ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது. இந்த பி. எப்.7 வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துவிட்டது.
குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் இரண்டு பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை மூன்று பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வைரஸ் குறுகிய அடைகாக்கும் காலத்தை கொண்டது. தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்றை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.