Kathir News
Begin typing your search above and press return to search.

'செல்பி' ஆசையால் யானையிடம் உயிரைப் பறிகொடுத்த பூசாரி

யானையோடு செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு பூசாரி ஒருவர் உயிரை பறி கொடுத்து இருக்கிறார். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு.

செல்பி ஆசையால் யானையிடம் உயிரைப் பறிகொடுத்த பூசாரி

KarthigaBy : Karthiga

  |  15 March 2023 7:15 AM GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. இந்த யானைகள் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி சுற்றுவட்டார கிராம பகுதிக்குள் நுழைந்தன. நேற்று காலை இந்த பகுதியில் ராம் குமார் என்ற கோவில் பூசாரி ஒருவர் நடந்து போனார். மேட்டுப்பட்டி அருகே மலை அடிவாரத்தில் போகும் போது அந்த வழியாக அந்த காட்டு யானைகள் வந்தன.


யானைகளை பார்த்ததும் அவருக்கு செல்பி எடுக்கும் ஆசை வந்தது. உடனே தனது பாக்கட்டில் இருந்த செல்போனை கையில் எடுத்து உயர்த்தி பிடித்தபடி யானை அருகே பின்னோக்கி நகர்ந்தார். அந்த நேரத்தில் இரண்டு யானைகளில் ஒன்று வேகமாக ஓடி வந்தது. அது கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை துத்திக்கையால் தூக்கி வீசியது. அதில் நிலைகுலைந்து போன ராம்குமார் அலறினார். அடுத்த நொடியில் அவரை கால்களுக்கு அடியில் போட்டு மிதித்தது. இதில் ராம்குமார் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். யானைத்தாக்கி ராம்குமார் இறந்து கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் .அவர்கள் வனத்துறைக்கும் பாரூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர் .


அதன் பேரில் அங்கு வந்த போலீசார் ராம்குமார் உடலை மேட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராம்குமாரின் தந்தை பெயர் எல்லப்பன் என்பதும் பாரூர் அருகே உள்ள காட்டு கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. செல்பி எடுக்கும் மோகத்தில் ராம்குமார் உயிரை பறிகொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபமாக பேசப்படுகிறது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News