மோசமான நிலையில் அரசு பேருந்துகள் - பேருந்தில் பயணத்தின்போது தூக்கி வீசப்பட்ட ரேஷன் கடை ஊழியர்
இருக்கை கழன்று ஓடியதால் நாகர்கோவில் காளியக் காவிளை அருகே ஓடும் பஸ்ஸில் இருந்து ரேஷன் கடை ஊழியர் வெளியே தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
By : Karthiga
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து தமிழக கேரளா எல்லை பகுதியான பளுகல் பகுதிக்கு நேற்று காலையில் தமிழக அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் தஞ்சாவூரைச் சேர்ந்த செல்வராஜ் உட்பட பல பயணிகள் பயணம் செய்தனர். செல்வராஜ் மேல்புறம் அருகே வட்டவிளை பகுதியில் தங்கியிருந்து ஒரு ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பஸ்ஸின் பின்பக்க வாசல் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார். பஸ் களியக்காவிளை அருகே உள்ள இடைக்காடு பகுதியில் சென்றபோது செல்வராஜ் அமர்ந்திருந்த இருக்கை திடீரென கழன்று பின்னோக்கி விழுந்தது. அப்போது அதில் அமர்ந்திருந்த செல்வராஜ் நிலைத்தருமாறி கீழே விழுந்தார். பஸ் வேகமாக சென்று கொண்டிருந்ததால் கண்ணிமைக்கும் நேரத்தில் இருந்து வாசல் வழியாக செல்வராஜ் வெளியே சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தார் .இதை பார்த்து சக பயணிகள் கூச்சல் இட்டனர்
உடனே டிரைவர் அந்த பஸ்ஸை நிறுத்தினார்.தொடர்ந்து படுகாயம் அடைந்த செல்வராஜை பயணிகள் மீட்டு அதே பஸ்ஸில் ஏற்றி கண்ணுமாமூடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஓடும் பஸ்ஸிலிருந்து இருக்கை கழன்று விழுந்து ரேஷன் கடை ஊழியர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.