கல்குவாரிக்கு எதிராக புகார் அளித்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை - சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே பயங்கரம்:கல்குவாரிக்கு எதிராக புகார் அளித்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
By : Karthiga
கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே கல்குவாரிக்கு எதிராக புகார் அளித்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கல்குவாரி உரிமையாளர் உட்பட மூன்று பேரை போலீசார் தேர்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கரூர் மாவட்டம தென்னிலை சுற்றுவட்டார பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் கரூர் சின்ன ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான தனியார் கல்குவாரியும் செயல்பட்டு வந்தது. இந்த கல் குவாரிக்கு அருகாமையில் கரூர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியும் சமூக ஆர்வலருமான ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக ஜெகநாதனுக்கும் செல்வ முத்துக்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையே செல்வகுமார் நிலப்பிரச்சினை தொடர்பாக தன்னை கொலை செய்ய முயன்றதாக ஜெகநாதன் கடந்த 2019 ஆம் ஆண்டு க. பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் செல்வகுமாரின் கல்குவாரி உரிமம் முடிந்து இயங்கி வருவதாக சுற்றுச்சூழல் அலுவலர் முகிலன் உள்ளிட்டோருடன் இணைந்து ஜெகநாதன் கனிமவளத்துறைக்கு பல்வேறு புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கனிம வளத்துறை அதிகாரிகள் செல்வகுமாருக்கு சொந்தமான கல்குவாரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் குவாரி சட்ட விரோதமாக செயல்பட்டது தெரிய வந்ததால் அதனை மூடி சீல் வைத்துவிட்டு சென்றனர் .இந்த நிலையில் க .பரமத்தி அருகே காருடையாம்பாளையம் என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் சென்ற ஜெகநாதன் மீது மினிலாரி ஒன்று மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இது குறித்த தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெகநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
ஜெகநாதன் மனைவி ரேவதியும் அவரது உறவினர்களும், முன்விரோதம் காரணமாக ஜெகநாதனை கொலை செய்துள்ளனர் என புகார் கூறி குப்பம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .இதில் உங்கள் கோரிக்கை குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜெகநாதன் மனைவி ரேவதி கொடுத்த புகாரின் பேரில் க .பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் .விசாரணையில் ஜெகநாதன் மீது மோதிய மினி லாரி கல்குவாரி உரிமையாளர், செல்வகுமாருக்கு சொந்தமானது என தெரியவந்தது. பின்ன நடத்தப்பட்ட புலன் விசாரணையில் கல்குவாரியை மூட காரணமாக இருந்த ஜெகநாதனை தீர்த்துக்கட்ட செல்வகுமார் முடிவு செய்துள்ளார் .பின்னர் அவர் தனது லாரி டிரைவரை ஏவி ஜெகநாதனை லாரியை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து கல் குவாரி உரிமையாளர் செல்வகுமார் ,சேலம் மாவட்டம் ,ஓமலூர் தாலுக்கா ராம ரெட்டிபட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சக்திவேல் மற்றும் சக்திவேலுடன் சென்ற ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் காவனூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் ஆகிய மூன்று பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை அடுத்து தலைமறைவானவர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.அந்த தனிப்படையினர் நேற்று காலை செல்வகுமார், சக்திவேல், ரஞ்சித் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர் .அனுமதி இன்றி இயங்கிய கல்குவாரியை மூட புகார் அளித்த சமூக ஆர்வலர் மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் க.பரத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.