எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெறாமலேயே பிளஸ்-2 வரை படித்த மாணவர்- ஆசிரியர்களின் கவனக்குறைவால் நேர்ந்த கோளாறு!
அரசு பள்ளி ஆசிரியர்களின் கவனக்குறைவால் எஸ்.எஸ் எல்.சி தேர்ச்சி பெறாமலேயே +2 வரை படித்த மாணவர் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
By : Karthiga
சிவகங்கை அருகே வி.மலம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் ஒருவர் கடந்த 2022 - ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு எழுதினார். அதில் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதை தொடர்ந்து அவர் உடனடியாக ஆகஸ்ட் மாதம் மறு தேர்வு எழுதினார். இதில் கணிதம், சமூக அறிவியல் ஆகிய இரண்டு பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்றார்.அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வில் 25 மதிப்பெண்ணும் எழுத்து தேர்வில் 15 மதிப்பெண் பெற்றார் .
அவர் மொத்தம் இதில் 40 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் எழுத்து தேர்வில் 20 மதிப்பெண் பெறவில்லை என்பதால் அவர் அந்த பாடத்தில் தோல்வி அடைந்ததாகவே கருதப்படுவார். ஆனால் அந்த மாணவன் அறிவியல் பாடத்தில் மொத்த மதிப்பெண் 40 பெற்றதால் தான் தேர்ச்சி அடைந்ததாக எண்ணி பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்தார். அந்த சமயத்தில் சான்றிதழ்களை ஆசிரியர்கள் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டனர்.
அதாவது அறிவியலில் மொத்த மதிப்பெண்கள் 40 என்று இருந்ததால் மாணவனை பிளஸ் ஒன் வகுப்பில் சேர்த்துக் கொண்டனர். அந்த மாணவன் தற்போது பிளஸ் ஒன் தேர்ச்சி பெற்று பிளஸ் டூ படித்து வந்தார். இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்வு வர இருக்கிறது. அதற்காக அவரது சான்றிதழ்கள் பள்ளி மூலம் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு மாணவனின் சான்றிதழை அதிகாரிகள் ஆய்வு செய்து பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்துள்ளதால் +2 பொதுத்தேர்வு எழுத அவரை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
அதன் பிறகு தான் ஆசிரியர்களுக்கு தாங்கள் செய்த தவறு தெரிய வந்தது. உடனடியாக அந்த மாணவனை பள்ளியில் இருந்து விடுவித்து மீண்டும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பிளஸ் சேர்ந்து அதன் பின்பு தான் பிளஸ் டூ தேர்வு எழுத முடியும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் மாணவனின் பெற்றோரை அழைத்து பள்ளி தலைமை ஆசிரியர் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு மாணவனை பள்ளியிலிருந்து வெளியேற்றினார்.
மேலும் "பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவனை பள்ளியில் எப்படி சேர்த்தார்கள்?" என்று சிவகங்கை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவனின் அறியாமையாலும் ஆசிரியர்களின் கவனக்குறைவா வாழும் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
SOURCE :DAILY THANTHI