மோடியின் உத்தரவில் குடியரசு தின விழாவில் கலைகட்ட இருக்கும் தென்னிந்தியாவின் பாரம்பரியம்- 2000 பெண்கள் சேலை அணிந்து பங்கேற்பு!
நடக்க இருக்கும் குடியரசு விழாவில் 2000 பெண்கள் தென்னிந்தியாவின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் சேலை அணிந்து பங்கேற்க இருக்கிறார்கள்.
By : Karthiga
டெல்லியில் நடக்க இருக்கும் குடியரசு தின விழாவில் தென்னிந்தியாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் 2000 பெண்கள் சேலை அணிந்து பங்கேற்க இருக்கிறார்கள். இந்தியா விடுதலை பெற்ற பின்னர் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு வருடம் ஜனவரி 26 ஆம் நாளை நாம் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரம்மாண்டமான அணிவகுப்பு நடைபெறும். அதில் இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறும்.
அதேபோல ஒவ்வொரு மாநிலங்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கும். ஒவ்வொரு குடியரசு தினத்தின் போதும் ஒரு சிறப்பு விருந்தினர் கலந்து கொள்வார். இந்த வருடம் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ள இயலாத காரணத்தினால் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் உட்பட 80,000 பேர் கலந்து கொள்கிறார்கள். பெண்களின் சக்தியை முன்னிலைப்படுத்தும் விதமாக இந்த குடியரசு தின விழாவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் பேரில் மோடியின் விருப்பப்படி 2000 பெண்கள் தென்னிந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் சேலை அணிந்து பங்கேற்கிறார்கள் .இவ் விழாவில் தபேலா வாசிக்கும் பெண்களும் இடம்பெறுகிறார்கள்.
SOURCE :maalaimurasu