தனியார் கம்பெனியில் ஆசிட் டேங்க் வெடித்து விபத்து- உயிர் சேதம் தவிர்ப்பு!
ராணிப்பேட்டை அருகே தனியார் கம்பெனியில் ஆசிட் டேங்க் வெடித்து விபத்து ஏற்பட்டது. அப்போது பணியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
By : Karthiga
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த முசிறி கிராமத்தில் தனியார் கெமிக்கல் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு பலர் வேலை செய்து வருகின்றனர். இந்த கம்பெனியில் கழிவறையை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஆசிட் தயாரிக்கப்படுகிறது. 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 பெரிய சேமிப்பு டேங்குகள் உள்ளன. அதில் ஆசிட்டை சேமித்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஆசிட் சேமிப்பு கிடங்கு ஒன்று திடீரென்று வெடித்து விபத்து ஏற்பட்டது. அதனால் அதிலிருந்து 'அலுமினியம் குளோரைடு ஆசிட் ' கம்பெனி வளாகம் மற்றும் நுழைவு வாயில் வரை பரவியது. இந்த நேரத்தில் பணியில் யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இது குறித்து உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆசிட் மீது தண்ணீரை பீயச்சி அடித்தும் மண்ணை கொட்டியும் ஆசிட் தன்மையை செயலிழக்க செய்தனர். பின்னர் வெடித்து சிதறிய ஆசிட் டேங்கை அப்புறப்படுத்தினர். இதை அடுத்து மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கம்பெனியில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இந்த விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
SOURCE :DAILY THANTHI