ஆயிரம் பாக்கு மரங்களை வெட்டி சாய்த்த சம்பவம் - போலீஸ் தீவிரமாக தேடுதல் வேட்டை
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே மீண்டும் ஆயிரம் பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
By : Karthiga
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.கரபாளையத்தில் கடந்த மார்ச் மாதம் 11-ஆம் தேதி பட்டதாரி இளம்பெண் ஆடு மேய்க்க சென்றார். அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்ல ஆலையில் வேலை பார்த்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி, பஸ் போன்றவற்றிற்கு தீ வைத்தது, குளத்தில் விஷம் கலந்தது என அடுக்கடுக்காக பல வன்முறை சம்பவங்கள் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்தன.
இதற்கிடையே கடந்த மே மாதம்- 13ம் தேதி நள்ளிரவு முத்துசாமிக்கு சொந்தமான ஆலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த கொட்டகையை மர்மநபர்கள் உடைத்தனர். மேலும் அங்கு தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மண் எண்ணெய் பாட்டில்களை வீசி தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்து கரூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதில் ராஜேஷ் என்பவர் உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்றனர்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து புதுப்பாளையம் பகுதியில் முருகேசனுக்கு சொந்தமான வாழை தோப்பில் 500க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர் . இதே போல கடந்த மாதம் 24 ஆம் தேதி ஜேடர்பாளையம் அருகே சின்ன மருது பகுதியில் போத்தனூரொச் சேர்ந்த எல். ஐ.சி முகவர் சௌந்தர்ராஜனுக்கு சொந்தமான 1600 பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர் .இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு எல். ஐ. சி முகவர் சௌந்தர்ராஜன் பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட அதே பாக்கு தோப்பில் மீண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன.
மேலும் அருகே உள்ள பெரிய மருதூரைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் சின்னமருதூர் பகுதியைச் சேர்ந்த மணி ஆகியோரது தோட்டத்தில் இருந்த மரவள்ளிக்கிழங்கு செடிகளும் வெட்டி சேதப்படுத்தப்பட்டன. பின்னர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்திற்கு கிணற்றில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குழாய்களையும், மின் ஒயர்களையும் மர்ம நபர்கள் அறுத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடுவருகின்னர்.
SOURCE :DAILY THANTHI