சென்னையில் நடந்த இல.கணேசன் இல்ல விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? - அண்ணாமலை விளக்கம்
சென்னையில் நடந்த மேற்கு வங்காள பொறுப்பு கவர்னர் இல.கணேசன் இல்ல விழாவில் கலந்து கொள்ளாதது ஏன் என்று அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
By : Karthiga
மேற்கு வங்காள பொறுப்பு கவர்னர் இல. கணேசன் சகோதரரின் 80 ஆவது பிறந்த நாள் விழா சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, புதுச்சேரி துணைநில கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். ஆனால் இந்த விழாவில் தமிழக பா.ஜ.க தலைவர் கே .அண்ணாமலை பங்கேற்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அண்ணாமலையிடம் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்காதது ஏன்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை கூறியதாவது:-
இலகணேசன் இல்ல நிகழ்வுக்கு செல்ல வேண்டும் என்பது என் ஆசைதான். ஆனால் மம்தா பானர்ஜி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடாது என்ற எண்ணம் என் மனதில் வந்தது. என்ன காரணம் என்றால் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் கொடூர ஆட்சியில் பா.ஜ.க தொண்டர்கள் மிகவும் துன்பப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.மேற்கு வங்காளத்தின் கவர்னராக தனிப்பட்ட முறையில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை இல.கணேசன் அழைத்துள்ளார்.அதில் எனக்கு எந்தவித தனிப்பட்ட கருத்தும் இல்லை. அதேவேளை மம்தா பானர்ஜி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்பதாலேயே நான் இல.கணேசன் இல்ல விழாவை தவிர்க்க வேண்டிய ஆகிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.