மத்திய அரசின் 'ஆபரேஷன் அஜய்'மூலம் மேலும் 471 இந்தியர்கள் இஸ்ரேலில் இருந்து மீட்பு
போர் நடக்கும் இஸ்ரேலில் இருந்து இரண்டு விமானங்கள் மூலம் மேலும் 471 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனர்.
By : Karthiga
இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் படையினருக்கு இடையே சுமார் பத்து நாட்களாக கடுமையான போர் நடந்து வருகிறது . இந்த சண்டையால் இஸ்ரேலில் வசித்து வரும் இந்தியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களை மீட்டு அழைத்து வர மத்திய அரசு 'ஆபரேஷன் அஜய்' என்ற பெயரிலான மீட்பு நடவடிக்கையை தொடங்கியது.
இதன் படி கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் ஏர் இந்தியா நிறுவனம் இயக்கிய இரண்டு விமானங்கள் மூலம் மொத்தம் 435 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனர். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் இருந்து மேலும் 2விமானங்களில் இந்தியர்கள் தாயகம் திரும்பினர். ஒரு விமானத்தில் 197 பயணிகள் டெல்லி வந்து சேர்ந்தனர்.
மற்றொரு விமானம் 274 இந்தியர்களுடன் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது. இரண்டு விமானங்களிலும் சேர்த்து மொத்தம் 471 பேர் வந்து சேர்ந்தனர். ஒரு விமானத்தை ஏர் இந்தியாவும் மற்றொரு விமானத்தை ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் இயக்கினர். இத்தகவல்களை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்தார்.இந்தியர்கள் வந்திருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து உள்ளார்.
SOURCE :DAILY THANTHI