ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க மேலும் ஒரு ரிட் மனு - சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
By : Karthiga
உத்திரபிரதேச மாநிலம் லக்னாவைச் சேர்ந்த இந்து தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் அசோக் பாண்டி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும். இந்த பாலத்தை தரிசிக்கும் வகையில் கடலில் குறிப்பிட தூரத்துக்கு சுவர் எழுப்ப உத்தரவிட வேண்டும் . ராமர் பாலத்தை தரிசிக்க ஏற்பாடு செய்யாமல் இருப்பது அரசியலமைப்பு சாசனம் வழங்கிய உரிமைகளை மீறுவதாக உள்ளது.
இப்பாலத்தை தரிசனம் செய்வதற்கும் வழிபடுவதற்கும் ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்ககோரிய ரிட் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டிய சுப்பிரமணிய சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த இருபதாம் தேதி மீண்டும் முறையிட்டார். அந்த முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட் மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தது.
இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி விசாரித்த போது தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கும் விவகாரம் ஆய்வில் இருந்து வருவதாக தெரிவித்த மத்திய அரசின் வாதத்தை பதிவு செய்து கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் இரண்டு வாரங்களுக்குள் கோரிக்கை மனுவை அளிக்கவும் சுப்பிரமணி சுவாமிக்கு அனுமதி வழங்கியது. மேலும் இந்த கடிதம் தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் முடிவை கோர்ட்டுக்கு தெரிவிக்க உத்தரவிட்டனர். முடிவு தொடர்பாக கோர்ட்டை நாடுவதற்கும் சுப்பிரமணியசாமிக்கும் அனுமதி அளித்து அவருடைய இடையீட்டு மனுவை முடித்து வைத்தது குறிப்பிடத்தக்கது.