கோவில்களை அறங்காவலர்களிடம் ஒப்படைக்க கோரி மனு - தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
கோவில்களை அறங்காவலர்களிடம் ஒப்படைக்க கூறிய மேல்முறையீட்டு மனுவுக்கு மூன்று வாரங்களில் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
By : Karthiga
தமிழகத்தில் உள்ள கோவில்களை நிர்வகிக்க எந்த நியமன உத்தரவும் இல்லாமல் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி இண்டிக் கலெக்டிவ் மற்றும் டி.ஆர். ரமேஷ் என்பவர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
செயல் அலுவலர் நியமனத்தின் போது எந்த காலவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதால் உரிய நியமன உத்தரவு இல்லாமல் நியமிக்கப்பட்ட செயல் அலுவலர்களை திரும்ப பெற்று கோவில்களின் நிர்வாகத்தை அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி இருந்தனர்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி,நீதிபதி பாரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை தாக்கல் செய்யும் மனுதாரருக்கு உரிமை இல்லை என்றும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்தவக்கில் சி.எஸ் வைத்தியநாதன் ஆஜராகி மதச்சார்பற்ற நாட்டில் கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது. தமிழ்நாட்டில் சுமார் 42 ஆயிரம் கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே கோவில்களின் செயல் அலுவலர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். அப்போது நீதிபதிகள் தமிழ்நாட்டில் எத்தனை கோவில்களில் இது போன்ற செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என கேட்டதுடன் அது குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக மூன்று வாரங்களில் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்