இந்தியாவில் 'ஐபோன் 14 'ரக செல்போன் உற்பத்தி - ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் 'ஐபோன் 14'ரக செல்போன் உற்பத்தி செய்யப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
By : Karthiga
ஆப்பிள் நிறுவனம் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் தொடர்ச்சியாக செல்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் 'ஐபோன் 14' ரக செல்போன் கடந்த ஏழாம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்தியா அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் சந்தைகளில் கடந்த 16ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. சீனாவில் ஆப்பிள் நிறுவனம் பெரும்பாலான தனது உற்பத்தியை மேற்கொண்டு வந்தது.கொரோனா பரவலால் அங்கு நிலவிய அசாதாரண சூழல் மற்றும் சீன அரசு உடனான மோதல் உட்பட பல்வேறு காரணங்களால் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்பால் ஆப்பிள் உட்பட பல்வேறு முன்னணி சர்வதேச உற்பத்தியாளர்கள் அங்கிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வருகிறது.தற்போது 'ஐபோன் 14' ரக செல்போன்களையும் பாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தி செய்ய உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ தகவலை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த செல்போன்கள் 'மேட் இன் இந்தியா' என்ற வாசகத்தை தாங்கி வெளிவர உள்ளது .தமிழகத்தில் தயாரிக்கப்படும் இந்த செல்போன்கள் உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "அதி நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் முக்கிய பாதுகாப்புத் திறன்களுடன் 'ஐபோன் 14' ரக செல்போன்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 'ஐபோன் 14' ரக செல்போன்களை உற்பத்தி செய்வதில் நாங்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.