சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தீபாங்கர் தத்தா நியமனம்- மத்திய அரசு உத்தரவு
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தீபாங்கர் தத்தாவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
By : Karthiga
மும்பை ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக இருப்பவர் தீபாங்கர் தத்தா. இவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்று தீபாங்கர் தாத்தாவை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை மதிய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
தீபாங்கர் தத்தாவுக்கு தற்போது 57 வயதாகிறது. நீதிபதிகளின் பதவிகாலம் 65 வயது என்பதால் அவர் வருகிற 2030 ஆம் ஆண்டு வரை நீதிபதி பதவியில் இருப்பார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் தீபாங்கர் தத்தா பொறுப்பேற்கிறார். நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜிய பரிந்துரைகள் குறித்து மத்திய அரசு முடிவு எடுக்காமல் இருப்பதற்கு எதிராக பெங்களூர் வக்கீல்கள் சங்கம் தாக்கல் செய்த கோர்ட் அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது மூத்த வக்கீலும் சுப்ரீம் கோர்ட் வக்கீல் சங்க தலைவருமான விகாஸ் சிங், நீதிபதி தீபாங்கர் தத்தாவை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கும் கொலிஜியம் பரிந்துரைக்கும் மத்திய அரசு ஐந்து வாரங்கள் ஆகியும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளது என சுட்டிக்காட்டினார். இது போன்ற தாமதத்தை புரிந்து கொள்ளவோ ஆமோதிக்கவோ முடியவில்லை என நீதிபதி எஸ்.கே. கவுல் குறிப்பிட்டது நினைவு கூறத்தக்கது.