சுப்ரீம் கோர்ட்டுக்கு ஐந்து புதிய நீதிபதிகள் நியமனம் - மத்திய அரசு ஒப்புதல்
சுப்ரீம் கோர்ட்டுக்கு ஐந்து புதிய நீதிபதிகள் நியமிக்க கொலிஜியம் வழங்கிய பரிந்துரையை ஏற்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
By : Karthiga
சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி உட்பட மொத்தம் 34 தலைமை நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே உள்ளன. ஏழு இடங்கள் காலியாக இருந்தன. இதனை அடுத்து ஐகோர்ட்டுகளில் நீதிபதிகளாக இருக்கும் சிலரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது.
இதற்கிடையே நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் நேற்று முன்தினம் விசாரித்தனர். விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டுக்கு ஐந்து புதிய நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் வழங்கிய பரிந்துரைக்கு மத்திய அரசு பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் ஒப்புதல் வழங்கும் என மத்திய அரசின் தலைமை வக்கீல் ஆர்.வெங்கடரமணி தெரிவித்தார். கொலீஜிய பரிந்துரைகள் மீது மத்திய அரசு முடிவு எடுக்காமல் இருப்பது மிக தீவிரமான விவகாரம் என்றும் மத்திய அரசை சங்கடப்படுத்தும் நிலைப்பாட்டை எடுக்கும் நிலைக்கு தள்ளிவிட வேண்டாம் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதியாக இருக்கும் பங்கஜ் மித்தல், சஞ்சய் கரரோல் , பி.வி சஞ்சய் குமார் மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் அசானுதீன் அமானதுல்லா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரே சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி உள்ளிட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. புதிய நீதிபதிகள் ஐந்து பேரும் இன்று பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு தலைமை நீதிபதி சந்திர சூட் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.