காதல் மனைவியை படிக்க வைத்து 12 பட்டங்களை பெற வைத்த தனியார் நிறுவன டிரைவர் - நிர்மலா சீதாராமன் பாராட்டு
காதல் மனைவியை படிக்க வைத்து அழகு பார்த்த தனியார் நிறுவன டிரைவரை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பாராட்டினார். இதுவரை 12 பட்டங்களை அந்த பெண் பெற்றுள்ளார்.
By : Karthiga
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஒரு நிகழ்ச்சி சம்பவம் நடந்தது. இதில் 41 பேருக்கு டாக்டர் மற்றும் ஆராய்ச்சி பட்டங்கள் வழங்கப்பட்டன. கடைசி ஆளாக ஆராய்ச்சி பட்டம் பெற்ற நீலா என்ற பெண்மணி படிப்புக்கு வயது தடை இல்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்தார். 49 வயதை கடந்திருக்கும் நீலா பன்னிரண்டாம் வகுப்பு முடித்த கையோடு பி.எஸ்.சி நர்சிங், எம்.எஸ்.சி நர்சிங், எம்.ஏ சமூக நல நிர்வாகம், எம்.பி.ஏ உட்பட பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளார். நேற்று அவர் நர்சிங் படிப்பில் ஹீமோ டயாலிசிஸ் என்ற தலைப்பில் ஆராய்ச்சி பட்டம் பெற்றார். குடும்பத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது நீலாவுக்கு படிப்பில் தீராத ஆசை. அதற்கு அவருடைய தந்தை வழிகாட்டியதுடன் ஊக்கப்படுத்தியும் இருக்கிறார். அதனால் 12-ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற நீலா முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் பரிசு பெற்றார்.
காதல் கணவர் ஷேக் காதரை கரம் பிடித்த இவர் படிப்பை தொடர ஆசைப்பட்டார். அதற்கு கணவர் ஷேக் காதர் பச்சைக் கொடி காட்டினார். அதனால் நீலா நர்சிங் பணியை மேற்கொண்டபடியே படிப்பை தொடர்ந்தார். அதன் விளைவாக நேற்று அவர் 12வது பட்டத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறார். மனைவியின் படிப்பு ஆசையை தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி அதில் வரும் வருமானத்தை கொண்டு பூர்த்தி செய்து இருக்கிறார் ஷேக் காதர்.
நேற்று பட்டமளிப்பு விழா மேடையில் நிர்மலா சீதாராமன் கையில் பட்டம் பெற்ற நீலா இது பற்றி அவரிடம் தெரிவித்தார். அதை எடுத்து மேடைகளில் இருந்தபடி நிர்மலா சீதாராமன் நீலாவையும் அவருடைய படிப்புக்கு ஊன்றுகோலாய் இருந்த கணவர் ஷேக் காதரையும் பாராட்டினார். நிகழ்ச்சி முடிந்ததும் நீலா நிருபர்களிடம் கூறுகையில் பெண் குழந்தைகளுக்கு கல்வி என்பது மிகவும் அவசியம். குடும்பத்தில் இருப்பவர்கள், பெண் குழந்தைகள் மேல் படிப்புக்கு படிக்க விரும்பினால் தடை செய்யாதீர்கள் அவர்களுக்கு வழிகாட்டியாக இருங்கள் என்றார்.