களத்திற்கே வராமல் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக கூறுவதா? அண்ணாமலை கண்டனம்!
களத்திற்கு வராமல் இரண்டு அல்லது மூன்று இடத்தில் பார்வையிட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதாக கூறுவது தவறானது என்று அண்ணாமலை கூறினார்.
By : Karthiga
மிக்ஜம் புயலால் பாதிப்புக்கு உள்ளான அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஆய்வு மேற்கொண்டார். தொழிலாளர்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது :-
மிக்ஜம் புயலினால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 3000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. பல்வேறு தொழிற்சாலைகள் கடனில் இயங்குகிறது என்றும் இதிலிருந்து மீண்டு வருவதற்கு பொருளாதார ரீதியான ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுள்ளார்கள். எந்திரங்கள் அனைத்தும் பழுதடைந்து இருப்பதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதனால் விநியோகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்கள் உடனடியாக காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.
அம்பத்தூர் ஏரியிலிருந்து வெளிவரும் தண்ணீரால் தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதை தடுக்க நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். மத்திய அரசு தொழில் நிறுவனங்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து தர வலியுறுத்துவோம்m மாநில அரசு இந்த அம்பத்தூர் பகுதியை மறந்து விட்டது. தொழில்துறை அமைச்சர் ஏன் இங்கு வந்து ஆய்வு செய்யவில்லை. தொழிற்பேட்டைகள் ரூபாய் 3000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கலாம். அம்பத்தூர் தொழிற்சாலை பகுதியில் உள்ள ஏரியில் நீர்வழி பாதை அடைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். இதை ரயில்வே துறை மந்திரியின் பார்வைக்கு கொண்டு சென்று பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.
மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் சரிவர நடக்கவில்லை . ஆனால் 80 சதவீதம் அளவிற்கு நிவாரண மீட்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டதாகவும் தலைமைச் செயலாளர் கூறுகிறார். திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற இடங்களில் தண்ணீர் தேக்கம் அதிகமாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். எனவே களத்திற்கு வராமல் இரண்டு அல்லது மூன்று இடத்தில் பார்வையிட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதாக கூறுவது தவறானது. இதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அமைச்சர்களும் அதிகாரிகளும் களத்தில் மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI