அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி - அமெரிக்கா ஆதரவு
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
By : Karthiga
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி சொந்தம் கொண்டாடிவரும் சீனா அருணாச்சலப் பிரதேசத்தை எப்போதும் ஜாங்னான் என்று குறிப்பிடுகிறது. ஆனால் இந்தியா அதை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இந்த நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கோரும் முயற்சியின் ஒரு பகுதியாக அங்குள்ள 11 இடங்களுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டியது .
சீனாவின் சிவில் விவகார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் இரண்டு நிலப்பகுதிகள், இரண்டு குடியிருப்பு பகுதிகள், ஐந்து மலை சிகரங்கள் ,இரண்டு ஆறுகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, இத்தகைய அடாவடி செயல்களை திட்டவட்டமாக நிராகரிப்பதாகவும் கூறியுள்ளது .இந்த நிலையில் அருணாச்சல பிரதேச விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளது .
இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் 'கரீன்- ஜீன் பியர்' பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில் அமெரிக்கா அருணாச்சலப் பிரதேசத்தை நீண்ட காலமாக இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரித்துள்ளது. மேலும் உள்ளாட்சிகளை மறு பெயர் இடுவதன் மூலம் பிராந்திய உரிமை கோரல்களை முன்னெடுப்பதற்கான எந்த ஒரு ஒருதலைபட்ச முயற்சிகளையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்றார்.