2027 'ம் ஆண்டுக்குள் நான்கு சக்கர டீசல் வாகனங்கள் தடை - பரபர தகவல்!
2027- ஆம் ஆண்டுக்குள் நான்கு சக்கர டீசல் வாகனங்களை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு எண்ணெய் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
By : Karthiga
நாட்டில் மாசு குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதனை முன்னிட்டு அதிகப்படியான கரியமிலவாயுவை உமிழும் டீசல், பெட்ரோல் வாகனங்களை தவிர்த்து மின்சார வாகனங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் பொது போக்குவரத்தில் கூட மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன .இந்த நிலையில் டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்கள் பயன்பாட்டை 2027 ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு எண்ணெய் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
மாற்று எரிசக்தியை பயன்படுத்துவது ஊக்குவிப்பது தொடர்பாக எண்ணெய் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட முன்னாள் எண்ணெய் செயலாளர் தருண் கபூர் தலைமையிலான குழு இந்த பரிந்துரையை செய்திருக்கிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட நகரங்களில் எரிவாயு மற்றும் மின்சார வாகனங்களை அதிக பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும் 2030 -ஆம் ஆண்டுக்குள் மாநகர பஸ் போக்குவரத்தில் மின்சார பஸ்களே இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் டீசல் பஸ்களை இயக்கக் கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த பெட்ரோலிய அமைச்சகம் மந்திரி சபையின் ஒப்புதலை பெற வேண்டும். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.