மணிப்பூரில் ஒன்பது அமைப்புகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
மணிப்பூரைச் சேர்ந்த ஒன்பது கிளர்ச்சி குழுக்கள் மற்றும் அவற்றின் துணை அமைப்புகளுக்கு மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது.
By : Karthiga
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மூன்றாம் தேதி கலவரம் நடந்தது. பெரும்பான்மையான மெய்தி இன மக்களுக்கும் சிறுபான்மையினரான பழங்குடியினருக்கும் மோதல் நடந்தது. ஆறு மாதங்களை கடந்த பிறகும் கலவரம் முற்றிலுமாக ஓயவில்லை. இதுவரை சுமார் 180 பேர் பலியாகியுள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் இதில் தேச விரோத செயல்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் ஆகியவற்றிற்காக மணிப்பூரில் 'மெய்தி' இனத்தை சேர்ந்த ஒன்பது கிளர்ச்சி குழுக்கள் மற்றும் அவற்றின் துணை அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மக்கள் விடுதலை ராணுவம், அதன் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணி, ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி , அதன் ஆயுத குழுவான மணிப்பூர் மக்கள் ராணுவம், காங்லேய் பக் மக்கள் புரட்சிகர கட்சி, அதன் ஆயுத குழுவான சிவப்புராணுவம், காங்லேய்பக் கம்யூனிஸ்ட் கட்சி, காங்லேய்பக் சோஷலிஸ்டு ஒற்றுமை கூட்டணி ஆகிய ஒன்பது அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மக்கள் விடுதலை ராணுவம் , ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, காங்லேய்பக் மக்கள் புரட்சிகர கட்சி, காங்லேய்பக் கம்யூனிஸ்ட் கட்சி,காங்லேய் யால் கன்பாலூப் ஆகிய ஐந்து அமைப்புகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே தடை விதிக்கப்பட்டது.
அந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற நான்கமைப்புகளுக்கும் புதிதாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு இத்தடை அமலில் இருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது. 'மெய்தி' இன கிளர்ச்சி குழுக்களை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால் அந்த வாய்ப்பபை பயன்படுத்தி தங்கள் பிரிவினைவாத நாசவேலை நடவடிக்கைகளுக்கு அவை ஆட்சேர்ப்பில் ஈடுபட வாய்ப்புள்ளது.
நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துக்கொண்டு தேச விரோத செயல்களை ஊக்குவிக்ககூடும். அப்பாவி மக்களையும் பாதுகாப்பு படையினரையும் குறி வைத்து கொலை செய்யும் சட்டவிரோதமான ஆயுதங்களை கொள்முதல் செய்யும். தங்களது சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பொதுமக்களிடம் நிதி திரட்டும். இத்தகைய சூழ்நிலையை கருதி 'மெய்தி' இன கிளர்ச்சி குழுக்களை சட்டவிரோத அமைப்புகள் என்று அறிவித்து தடை செய்ய மத்திய அரசு முடிவு எடுத்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
SOURCE :DAILY THANTHI