யூனியன் பட்ஜெட்டில் ஜாக்பாட் அடிக்க காத்திருக்கும் வங்கி ஊழியர்கள்!
யூனியன் பட்ஜெட்டில் வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
By : Karthiga
ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் தங்களுக்கு ஆதாயம் தரும் அறிவிப்புகள் இருக்கும் என நாட்டின் அனைத்து பிரிவினரும் எதிர்பார்க்கிறார்கள். பொதுவாக, சாமானியர்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும், செலவுகளைக் குறைக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறுகின்றன. இந்த ஆண்டும், மக்களுக்கு பயன் தரும் அறிவிப்புகளை வெளியிடுவதில் நிதியமைச்சர் சிறப்பு கவனம் செலுத்துவார் என நம்பப்படுகின்றது.
எனினும், பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் ஏதும் இருக்காது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆனாலும், இம்முறை பட்ஜெட்டில் தங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என நாட்டின் வங்கி ஊழியர்கள் அரசாங்கத்திடம் பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். வங்கி ஊழியர்கள் நாட்டின் மிகப்பெரிய வாக்கு வங்கியாக உள்ளனர். அவர்களை ஈர்க்கும் வகையில், பட்ஜெட்டில் (Budget) பல அறிவிப்புகளை அரசு வெளியிடலாம். புதிய ஆண்டில் வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம். இந்தியன் வங்கி சங்கம் (IBA ) மற்றும் இதர வங்கி தொழிற்சங்கங்கள் சம்பளத்தை 17 சதவீதம் உயர்த்தி சம்பள திருத்தம் குறித்து ஒருமித்த கருத்தை எட்டியுள்ளன. இந்த சம்பள உயர்வு நவம்பர் 1, 2022 முதல் அமலுக்கு வரும்.
தற்போது மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. வங்கி ஊழியர்களுக்கு (Bank Employees) வாரத்தில் 5 நாள் வேலை என்ற கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டால், வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இருப்பினும், சாமானியர்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க, அவர்களின் வேலை நேரம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் செயல்படும் நேரம் அதிகரிக்கப்படலாம். வரவிருக்கும் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, சம்பள ஒப்பந்தம் தேர்தலுக்கு முன்னதாக அதாவது பட்ஜெட்டைச் சுற்றி கையெழுத்திடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கி ஊழியர்கள் முக்கியமான வாக்காளர் தளம். கடந்த 2020ஆம் ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தம் மூன்று வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வந்தது.