ரூ.3,760 கோடியில் பேட்டரி எரிசக்தி சேமிப்பு மையம்- மத்திய மந்திரி சபை ஒப்புதல்
3,760 கோடியில் பேட்டரி எரிசக்தி சேமிப்பு மையம் அமைக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.
By : Karthiga
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராதாக்கூர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அனுராக் தாக்கூர் கூறியதாவது:-
இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தொழில் வளர்ச்சி உண்டாக்கும் திட்டம் 2017 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதற்கு ரூபாய் 131 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மேற்கண்ட இரண்டு மாநிலங்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு கடன் காப்பீடு என்ற வகையில் ஊக்கச் சலுகைகள் அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். 2028 - 2029 நிதி ஆண்டு வரை திட்டத்துக்கான தேவைகளை நிறைவேற்ற கூடுதல் நிதி தேவைப்படுகிறது. ஆகவே கூடுதலாக ரூபாய் 1,164 கோடி 53 லட்சம் ஒதுக்கீடு செய்ய மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள 774 நிறுவனங்களுக்கு இத்தொகை அளிக்கப்படும். பேட்டரி எரிசக்தி சேமிப்பு மையத்தை நிறுவ ரூபாய் 3,760 கோடி நிதியம் அமைக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இத்தொகை முழுவதையும் மத்திய அரசே அளிக்கும். 2030 - 2031 நிதி ஆண்டுக்குள் நான்காயிரம் மெகாவாட் மணிநேர சேமிப்பு வசதி நிறுவப்படும். அதற்கு ஐந்து தவணைகளாக இத்தொகை விடுவிக்கப்படும். இந்த நிதியத்தால் ரூபாய் ஒன்பதாயிரத்து ஐநூறு கோடி முதலீடு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE:DAILY THANTHI