பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் அறிவிப்பிலும் 'பாரத்'!
ஜி 20 அழைப்பிதழில் பாரத குடியரசு தலைவர் என பெயர் மாற்றப்பட்ட நிலையில் பிரதமர் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
By : Karthiga
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்திற்கு மத்திய பா.ஜ.க அரசு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது .அதனை உறுதிப்படுத்தும் விதமாக குடியரசுத் தலைவரின் சார்பில் ஜி- 20 மாநாட்டில் பங்கேற்கும் உலக தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள இரவு விருந்து அழைப்பிதழில் பிரசிடெண்ட் ஆப் பாரத் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் இந்தியா மற்றும் 18வது கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இந்தோனேசியா செல்ல உள்ள நிலையில் பிரதமர் மோடியின் பயணம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் அறிவிப்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது .
பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா பிரதமர் நரேந்திர மோடியின் இந்தோனேசிய பயணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள பிரதமர் மோடியின் பயண நிகழ்ச்சி நிரலில் பாரத பிரதமர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா மற்றும் பாரத் என்று இரண்டு வார்த்தைகள் இருந்தாலும் இதுவரை பிரைம் மினிஸ்டர் ஆஃப் இந்தியா , பிரசிடெண்ட் ஆஃப் இந்தியா என்றுதான் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .ஆனால் திடீரென இதில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.
இந்தியா என்ற வார்த்தைக்கு பதிலாக பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கி இருக்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பா.ஜ.கவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இந்தியா என்ற பெயரை கூட்டணிக்கு வைத்துள்ளதற்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்தியா என கூட்டணிக்கு பெயர் வைக்க தடை இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது .
இந்நிலையில் தான் தற்போது இந்தியா என்ற நாட்டின் பெயரை 'பாரத்' என மாற்ற பா.ஜ.க அரசு தீவிரமாக முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. இந்தியா என்ற வார்த்தைக்கு மாற்றாக பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் இன் தொடர் குரலாக உள்ள நிலையில் அதனை இப்போது பா.ஜ.க அரசு அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறது .
SOURCE :Oneindia.com