சீனாவுடனான எல்லை விவகாரம்: பிரதமர் மோடியின் திட்டம் என்ன?
சீனாவுடனான எல்லை விவகாரம் குறித்து பேசி உள்ள பிரதமர் மோடி இந்தியாவின் இறையாண்மை மற்றும் கண்ணியத்தை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும் இதற்காக முழுமையாக தயாராக உள்ளதாகவும் கூறினார்.
By : Karthiga
கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் கடந்த 2020 ஆம் ஆண்டு அத்துமீறியதால் இரு நாடுகளுக்கும் இடையே ஆன எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. அது மட்டும் இன்றி அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் கிழக்கு எல்லைகளில் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. சீனாவில் இந்த அத்துமீறல்களை தடுத்து நாட்டை பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜப்பான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியா சீனா இடையே ஆன உறவின் எதிர்கால முன்னேற்றமானது பரஸ்பரம், மரியாதை , உணர்திறன் மற்றும் நலன்கள் அடிப்படையில் மட்டுமே இருக்கும். இருதரப்பு உறவுகளை இயல்பாக்குவது, பரந்த பிராந்தியத்துக்கும் உலகுக்கும் பயனளிக்கும் . நாட்டின் இறையாண்மை, சட்டத்தின் ஆட்சி மற்றும் சர்ச்சைகளுக்கு அமைதியான தீர்வு ஆகியவற்றிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நாட்டின் இறையாண்மை மற்றும் கண்ணியத்தை பாதுகாப்பதற்கு உறுதி பூண்டுள்ளோம். இதற்காக இந்தியா முழுமையாக தயாராகவே உள்ளது. பாகிஸ்தான் விவகாரத்தை பொருத்தவரை அண்டை நாடுகளுக்கு இடையே இயல்பான இருதரப்பு உறவுகளுக்கு எல்லையில் அமைதியும், நிலைத் தன்மையும் அவசியம் ஆகும். பயங்கரவாதம் மற்றும் பகைமை இல்லாத ஒரு சாதகமான சூழலை உருவாக்குவது அவர்களின் கடமையாகும். இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது.
உலக அளவில் மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று. 2014 ஆம் ஆண்டில் உலக அளவில் 10-ஆவது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா இன்று 5-ஆவது இடத்தை அடைந்துள்ளதால் நமது முன்னேற்றம் தெளிவாக தெரிகிறது. உலகளாவிய சிக்கல்கள் வளர்ச்சிக்கு சவால்களை ஏற்படுத்துகின்றன என்பது உண்மைதான். ஆனாலும் சமீபத்திய ஆண்டுகளில் நாங்கள் வலுவான அடித்தளத்தை உருவாக்கி இருக்கிறோம். இது நம்மை சாதகமாக நிலை நிறுத்துகிறது பிரச்சனையில் இந்தியாவின் நிலை தெளிவாக உள்ளது.
இந்தியா அமைதியின் பக்கம் இருக்கிறது. உணவு, எரிபொருள் மற்றும் உரங்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் உறுதிபூந்துள்ளோம் . ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடன் தொடர்பை பேணுகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.