Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்- வேதனையில் பக்தர்கள் !

Breaking News.

இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு  கட்டுப்பாடுகள்- வேதனையில் பக்தர்கள் !

ShivaBy : Shiva

  |  1 Sep 2021 1:38 PM GMT

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட முடியாத அளவிற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது விநாயகர் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 10ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் நிலையில் கொரோனா நோய் தொற்று பரவும் என்று தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகரை வைத்து வழிபாடு செய்வதற்கும் விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை சாந்தோமில் இருந்து நேப்பியர் பாலம் வரை இருக்கும் நீர்நிலைகளில் விநாயகர் சிலையை கரைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு கொள்ளலாம் என்றும் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து இருந்த நிலையில் இந்த ஆண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் விநாயகர் சிலை செய்யும் கைவினைக் கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று விநாயகர் சிலை செய்யும் கலைஞர்கள் சட்டசபையை முற்றுகை இட்டதால் அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களுக்கு உணவு கூட வழங்காமல் ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்திருந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக மண்ணின் பாரம்பரியத்தை புரிந்து கொள்ளாமல் திமுக ஆட்சி செய்து வருகின்றது என்றும் இதனால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கண்டிப்பாக நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.


Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News