உலகப் பிரச்சனைகளுக்கு புத்தரின் போதனைகளே தீர்வு - பிரதமர் மோடி உறுதி!
போர், பயங்கரவாதம், மத வன்முறை போன்ற சவால்களை உலகம் சதித்து வரும் நிலையில் உலக பிரச்சனைகளுக்கு புத்தரின் போதனைகள் தீர்வு அளிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
By : Karthiga
சர்வதேச புத்த மத கூட்டமைப்புடன் இணைந்து மத்திய கலாச்சார அமைச்சகம் டெல்லியில் உலக புத்தமத உச்சி மாநாட்டை நடத்துகிறது. நேற்றும் இன்றும் இரண்டு நாட்களாக மாநாடு நடக்கிறது. 'சமகால சவால்களுக்கு எதிர்வினைகள் : தத்துவத்தில் இருந்து நடைமுறைக்கு என்ற கருப்பொருளில் மாநாடு நடக்கிறது. உலகம் முழுவதும் இருந்து புத்த மத துறவிகள், சிந்தனையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மேடையில் இருந்த புத்தர் சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். மாநாட்டை தொடங்கி வைத்த அவர் பேசியதாவது:-
இன்றைய உலகம் போர், பொருளாதார ஊசலாட்டம் ,பயங்கரவாதம், மத வன்முறை, பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த உலக பிரச்சினைகளுக்கு புத்தரின் போதனைகள் தீர்வு அளிக்கின்றன. நாடுகளும் மக்களும் தங்களது சொந்த நலன்களுடன் உலக நலன்களுக்கும் முன்னுரிமை அளிப்பது இந்த நேரத்தில் அவசியம். ஏழைகள் மற்றும் பின்தங்கிய நாடுகளைப் பற்றி உலகம் சிந்திக்க வேண்டும்.
புத்தர் காட்டிய பாதையை இந்தியா பின்பற்றி வருகிறது .உதாரணமாக பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு இந்தியா உதவியது. ஒவ்வொரு மனிதனின் வேதனையையும் தனது வேதனையாக கருதுகிறது .அது போல் புத்தரின் போதனைகளை பரப்ப எனது அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளது. குஜராத்தில் நான் பிறந்த ஊருக்கும் எனது சொந்த தொகுதியான வாரணாசிக்கும் புத்த மதத்துடன் ஆழமான தொடர்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.