அட இப்படி கூட தார் சாலை அமைக்கலாமா? சமூக வலைதளத்தில் வைரலான செய்தி
புதுக்கோட்டையில் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை தவிர்த்து தார் சாலை அமைத்தது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது
By : Karthiga
புதுக்கோட்டை நகராட்சியில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிதாக தார் சாலைகள் பல்வேறு இடங்களில் அமைக்கப்படுகிறது. இதில் புதுக்கோட்டை சாந்த நாத சுவாமி கோவில் அருகே தார்சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியின் போது கோவில் அருகே ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரின் உரிமையாளர் யார் என்று தெரியாததால் அந்த இடத்தை மட்டும் தவிர்த்து தார்சாலை அமைக்கும் பணியை பணியாளர்கள் மேற்கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் விடுபட்ட அந்த பகுதியில் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. காரை அப்புறப்படுத்தாமல் தார் சாலை பணியை மேற்கொண்டுள்ளனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதற்கிடையில் தார்சாலை அமைக்கும் பணியின் போது அந்த காரை அகற்றுமாறு அங்கிருந்த பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது .ஆனால் காரின் உரிமையாளர் யார் என்று தெரியாததால் அந்த இடத்தை மட்டும் விட்டு விட்டு விடுபட்ட இடத்தில் நேற்று இரவு அந்த பணியை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அதற்குள் யாரோ வேண்டுமென்றே இதனை திட்டமிட்டு பரப்பியதாகவும் நகராட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கிடையில் விடுபட்ட அந்த இடத்தில் தார்சாலை அமைக்கப்படும் என நகராட்சி வட்டாரத்தில் தெரிவித்தனர்.