சென்னையில் இருந்து இவ்வளவு வேகத்தில் திருப்பதிக்கு செல்ல முடியுமா?வந்தே பாரத் ரயிலால் மக்கள் மகிழ்ச்சி!
விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மூலம் திருப்பதிக்கு இனி 95 நிமிடங்களில் செல்லலாம்.இதனால் தமிழக பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
By : Karthiga
சென்னை மற்றும் விஜயவாடாவை இணைக்கும் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மூலம், சென்னையில் இருந்து பயணிகள் இப்போது 95 நிமிடங்களில் திருப்பதியை அடையலாம்.ஆந்திராவின் புகழ்பெற்ற கோயிலான திருப்பதிக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் அடிக்கடி சென்று வருகின்றனர். தமிழகத்தின் எல்லையோரத்தில் இருக்கும் திருப்பதிக்கு வேலூர் வழியாக செல்லலாம் என்றாலும், சென்னை வழியாகவே அதிகமானோர் பயணித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ரயில் சேவை.
இந்தநிலையில், ரயில் பயணிகளுக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக சென்னையிலிருந்து அதிவேக ரயிலான வந்தே பாரத் திருப்பதிக்கு இணைப்பை வழங்கும் வகையில் இயக்கப்படுகிறது. அதாவது, சென்னையிலிருந்து விஜயவாடா செல்லும் வந்தே பாரத் விரைவு ரயில் மூலம் திருப்பதிக்கு விரைவாக பயணிக்கலாம். இந்த அதிவேக ரயில் சென்னைக்கும் திருப்பதியில் இருந்து 9 கி.மீ தொலைவில் உள்ள ரேணிகுண்டாவுக்கும் இடையிலான 136.6 கி.மீ தூரத்தை ஒரு மணி நேரம் 35 நிமிடங்களில் கடக்கிறது. இதற்கு மாறாக, தற்போதுள்ள சப்தகிரி மற்றும் கருடாத்ரி தினசரி விரைவு ரயில்கள் சென்னையில் இருந்து ரேணிகுண்டாவுக்குச் செல்ல இரண்டு மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும். தனியார் அல்லது அரசுப் பேருந்துகளில் சாலைப் பயணம் சராசரியாக மூன்று மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும்.
சென்னையிலிருந்து விஜயவாடா செல்லும் வந்தே பாரத் விரைவு ரயில், சென்னை மற்றும் திருப்பதி இடையேயான தொடர்பை மேம்படுத்த ரேணிகுண்டா மற்றும் நெல்லூர் வழியாகச் செல்லும் சுற்றுப் பாதையில் (514 கி.மீ.) செல்லும். இந்த ரயில் இறுதிப் பயணத்தை ஆறு மணி நேரம் 40 நிமிடங்களில் கடந்து செல்லும். குடூர் மற்றும் ஓங்கோல் வழியாக விஜயவாடாவிற்கு தற்போதுள்ள 432 கிமீ கார்ட்லைன் பாதையை கடக்க தினசரி ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸில் ஏழு மணிநேரமும், சென்னை - ஷாலிமார் கோரமண்டல் எக்ஸ்பிரஸில் 6 மணி நேரம் 40 நிமிடங்களும் ஆகும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வாரத்தில் செவ்வாய்க்கிழமைகள் தவிர்த்து ஆறு நாட்கள் இயக்கப்படும். இந்த ரயில் சென்னையில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு விஜயவாடா சென்றடையும், ரேணிகுண்டா (காலை 7.10), நெல்லூர் (காலை 8.40), ஓங்கோல் (காலை 10.10), தெனாலி (காலை 11.22) ஆகிய இடங்களில் நிறுத்தப்படும். சென்னையிலிருந்து திருப்பதிக்கு விரைவான இணைப்பை வழங்குவதே
இந்த ரயிலின் முக்கிய நோக்கம். அதேபோல், மறுமார்க்கத்தில் விஜயவாடாவில் இருந்து மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு சென்னை சென்றடையும். இந்த ரயில் தெனாலியில் மாலை 3.49 மணிக்கும், ஓங்கோலில் மாலை 5.03 மணிக்கும், நெல்லையில் 6.18 மணிக்கும், ரேணிகுண்டாவில் இரவு 8.05 மணிக்கும் நின்று செல்லும். இதனிடையே தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள பயணிகளுக்கு வந்தே பாரத் ரயிலின் பலன்களை வழங்க அரக்கோணத்தில் ரயில் நிறுத்தம் வழங்கப்பட வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
SOURCE :indianexpress.com