நாகை மாவட்டத்தில் உள்ள பழமையான கோவிலில் நிறுத்தப்பட்ட பூஜைகளை மீண்டும் நடத்த கோரி வழக்கு- அறநிலையத்துறை பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
நாகை மாவட்டத்தில் உள்ள பழமையான கோவிலில் நிறுத்தப்பட்ட பூஜைகளை மீண்டும் நடத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அறநிலைத்துறை பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
By : Karthiga
சென்னை ஹைகோர்ட்டில் வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சௌரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகித்து வருகிறது. இந்த கோவிலில் ஆறு கால பூஜைகளும் தினமும் நடைபெற்று வந்தது .
அதுவும் காலசந்தி, உச்சிக்கால பூஜைகளில் படையல் வைத்து வழிபட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் எந்த காரணமும் இல்லாமல் இரு பூஜைகளையும் நிறுத்திவிட்டனர். கோவில் உள்ள ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மணவாள மாமுனிகள் ஆகியோரது பிறந்தநாள் விழா கொண்டாடும் போது அவர்களுடைய உற்சவர் சிலைகள் பத்து நாட்களுக்கு வைத்து நடைபெறும் பூஜைகளும் நிறுத்தப்பட்டு விட்டது.
இவையெல்லாம் ஆகம விதிகளுக்கு எதிரானது. எனவே இந்த பூஜைகள் அனைத்தையும் மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்து ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா , நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனுவை இரண்டு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.