திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் செல்போன் தடை உத்தரவு மூன்று நாட்களில் அமல்படுத்தப்படும்- அறங்காவலர் குழு தலைவர் தகவல்
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் செல்போன் தடை உத்தரவு மூன்று நாட்களில் முழுமையாக அமல்படுத்தப்படும் என அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்தார்
By : Karthiga
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் செல்போன் தடை உத்தரவு மூன்று நாட்களில் அமல்படுத்தப்படும் என அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தெரிவித்தார். முதலில் நீதிமன்ற உத்தரவை கோவில் வளாகங்களில் அறிவிப்பு பலகைகள் மூலம் பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும். மூன்று நாட்களில் நீதிமன்ற உத்தரவு முழுமையாக கோவிலில் அமல்படுத்தப்படும். மேலும் பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் டி-ஷர்ட், ஜீன்ஸ் ,ஷார்ட்ஸ் லெக்கின்ஸ் அணிந்து வருபவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.கோவிலில் மெகா திட்ட பணிகள் நடந்தாலும் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய எந்தவித தடையும் கிடையாது. பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வழக்கம் போல் எல்லா நாட்களிலும் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும். சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அதேபோல் சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சண்முகார்ச்சனை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.