நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மக்கள் தொகை கணக்கெடுப்பா? சாத்தியமே இல்லை மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்!
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாத்தியமில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
By : Karthiga
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2019 - ஆம் ஆண்டு கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்ததாக கடந்த 2020 - ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது .ஆனால் கொரோனா பெரும் தொற்று காரணமாக இந்த பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
அதை தொடர்ந்து இந்த பணிகள் தொடர்ந்து நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இன்னும் புதிய அட்டவணை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் புதிய மாவட்டங்கள் அல்லது துணை மாவட்டங்களை உருவாக்குவதற்காக நிர்வாக எல்லைகளை முடக்கும் தேதி வருகிற ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. இந்தக் காலக்கெடு முடிவடைந்த மூன்று மாதங்களுக்குப் பின்னர் தான் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது விதிமுறையாகும்.
அந்த வகையில் செப்டம்பர் 30- ஆம் தேதி வரை இதற்கு வாய்ப்பு இல்லை. இதை போல மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளும் 30 லட்சம் அரசு ஊழியர்களுக்கான பயிற்சிக்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் தேவைப்படும். இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கும் . வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இதில் இடம்பெறும்.
அக்டோபர் மாதத்தில் இருந்து மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பயிற்சி, நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் அது சார்ந்த பயிற்சிகள் தொடங்கும். இதில் தேர்தல் பணிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே நடைபெறும் வாய்ப்பு உள்ளது. இந்த தகவல்களை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.