இலங்கையில் சீன உளவு கப்பல், உஷாரான இந்தியா-அடுத்து என்ன?
இலங்கை துறைமுகத்தில் சீன உளவு கப்பல் ஒரு வாரம் நிற்கும்.சிங்கள அரசின் அனுமதியால் இந்தியா உஷார்.
By : Karthiga
இலங்கை துறைமுகத்தில் சீன உளவு கப்பல் ஒரு வாரம் நிற்கும் என்று அந்நாட்டு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதனால் இந்தியா தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
இலங்கையின் தென்பகுதியில் உள்ள ஹம்பன் தொட்டா ஆழ்கடல் துறைமுகம், சீனாவிடம் கடன் பெற்று மேம்படுத்தப்பட்டது. அந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால் ,அத் துறைமுகத்தை சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு அளித்துள்ளது. இதற்கிடையே சீனாவின் 'யுவான் வாங்-5'என்ற உளவு கப்பல் ஹம்பன்தொட்டா துறைமுகத்திற்கு வருவதாக தகவல் வெளியானது.இது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
இதுபற்றி கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "சீனக் கப்பல் வருவதை நாங்கள் அறிவோம். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலனில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த விளைவையும் உன்னிப்பாகக் கண்காணிப்போம்" என்று கூறினார்.
இந்நிலையில் சீன கப்பல் வருவதை இலங்கை ராணுவம் நேற்று உறுதி செய்தது .இது குறித்து அதன் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது :-
சீன கப்பல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஹம்பன்தொட்டா துறைமுகத்திற்கு வரும் .17-ஆம் தேதி வரை அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும் .பிற நாடுகளின் வர்த்தக மற்றும் ராணுவ கப்பல்கள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையவும் கடந்து செல்லவும் இலங்கை அனுமதி கொடுப்பது வழக்கம் தான் அந்த அடிப்படையில் இலங்கை அனுமதி கொடுத்துள்ளது இவ்வாறு அவர் கூறினார் .
சீன உளவு கப்பல் எரிபொருள் நிரப்ப வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்திய பெருங்கடலின் வடமேற்கு பகுதியில் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு பணியிலும் ஆராய்ச்சி கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என்று தெரிகிறது. இதனால் இந்தியா உஷார் அடைந்துள்ளது. இந்தியாவின் தென் மாநிலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
இதற்கிடையே சீன உளவு கப்பலை அனுமதிப்பதன் மூலம் இந்தியாவுக்கு பாதுகாப்பு கவலையை உருவாக்கக் கூடாது என்று தமிழ் தேசிய கூட்டணி கூறியுள்ளது.