Kathir News
Begin typing your search above and press return to search.

சிறப்பான வாழ்வு தரும் சித்ரா பௌர்ணமி வழிபாடு

எத்தனையோ பௌர்ணமிகள் வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியான சித்ரா பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாக கருதப்படுகிறது.

சிறப்பான வாழ்வு தரும் சித்ரா பௌர்ணமி வழிபாடு

KarthigaBy : Karthiga

  |  10 April 2023 6:15 AM GMT

மாதங்களில் முதல் மாதமாக வருவது சித்திரை.நமது வாழ்க்கையை நித்திரையிலேயே கழிக்காமல் முத்திரை பதித்த வாழ வேண்டுமானால் சித்திரையில் வரும் பௌர்ணமியை சிறப்பாக கொண்டாட வேண்டும். அது மட்டுமல்ல நாம் செய்யும் பாவ புண்ணியங்களை பதிந்து வைக்கும் சித்திரகுப்தனையும் சிந்தையில் நினைத்து வழிபட்டால் அத்தனை காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். திதி பார்த்து வழிபட்டால் விதிமாறும் என்று சொல்வார்கள் நமக்கு விதிக்கப்பட்ட விதியை மாற்ற முடியாவிட்டாலும் விதியின் வலிமையை கொஞ்சம் குறைக்க வழிகாட்டுவது திதியின் அடிப்படையில் நாம் செய்கின்ற வழிபாடுகள் தான்.


சதுர்த்தி திதியில் ஆனைமுகப்பெருமானை வழிபட்டால் சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும். சஷ்டி திதியில் முருகப்பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் விலகும். ஏகாதசி திதியில் பெருமாளை வழிபட்டால் பெருமைகள் வந்து சேரும். அஷ்டமி திதியில் கிருஷ்ணரை வழிபட்டால் கீர்த்திகள் உண்டாகும். நவமி திதியில் ராமபிரானை வழிபட்டால் நல்ல இல்லறம் அமையும் .அமாவாசை திதியில் முன்னோர்களை வழிபட்டால் முன்னேற்றம் கூடும். பௌர்ணமி திதியில் மலைவலம் வந்து சிவன் உமையவள் மால்மருகன் ஆகியோரை வழிபட்டால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும்.


மாதந்தோறும் பௌர்ணமி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியை மட்டும் சித்ரா பௌர்ணமி என்று சிறப்பு பெயரிட்டு நாம் அழைப்பது வழக்கம். அந்த நாள் சித்திரை 22 ஆம் நாள் வெள்ளிக்கிழமை வருகிறது .அன்றைய தினம் நாம் மலை அளவு செய்த பாவத்தை கடுகளவு குறைத்து எழுது என்றும் கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாக உயர்த்தி எழுது என்றும் சித்தரகுப்தனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். அதோடு சித்திரகுப்தனுக்கு பொங்கல் படைத்து இனிமேல் நான் செய்யும் செயல்கள் அனைத்தும் புண்ணியம் தருவதாக அமைய வழிகாட்டு. வாழ்க்கை பாதையை சீராகவும் நேராகவும் ஆக்கிக் கொடு. ஆயுள் வளரவும் ஆற்றல் பெருகவும் செல்வம் பெருகவும் வழிகாட்டு என்று வேண்டிக் கொண்டால் வாழ்க்கை பயணம் சிறப்பாக அமையும்.


பௌர்ணமி விரதம் இருப்பவர்கள் விரதத்தை தொடங்க வேண்டிய நாள் சித்ரா பௌர்ணமி தான். விரதத்தை முழுமையாக கடைபிடிப்பவர்கள் இரவு நிலா பார்த்து வழிபட்ட பிறகுதான் உணவு அருந்த வேண்டும். நமது பாவ புண்ணியத்தையும் பதிந்து வைத்து அடுத்த பிறவிக்கும் அனுகூலம் தரும் சித்திரகுப்தனை வழிபட்டால் செல்வநிலை உயரும். தேவையானவை தேவையான நேரத்தில் நடக்கும். இந்த சித்திரகுப்தனுக்கு காஞ்சிபுரத்தில் கோவில் உள்ளது. அருப்புக்கோட்டை அமிர்தலிங்கேஸ்வரர் கோவிலிலும் தனிச் சனதி இருக்கிறது. இங்கும் சென்று சித்திரை குப்தனை வழிபட்டு சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொள்ளலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News