பயங்கரவாதிகள் ரசாயனம் கலந்த வெடிகுண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்: தேசிய பாதுகாப்பு படையின் முதல்கட்ட அறிக்கையில் தகவல்
பயங்கரவாதிகள் ரசாயனம் கலந்த வெடிகுண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்: தேசிய பாதுகாப்பு படையின் முதல்கட்ட அறிக்கையில் தகவல்
By : Kathir Webdesk
காஷ்மீர் தாக்குதலுக்கு ரசாயனம் கலந்த வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள், பயன்படுத்தியதாக தேசிய பாதுகாப்பு படை முதல்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலை உலக நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க நேரத்தில் பதிலடி கொடுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் காஷ்மீர் தாக்குதல் குறித்து நடைபெறும் விசாரணை பற்றி ஆலோசனை நடத்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது இல்லத்தில் உயர்மட்ட கூட்டத்தை கூட்டினார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்,உள்துறை செயலர் ராஜீவ் கவ்பா, ரா அமைப்பின் தலைவர் அணில் தாஸ்மனா, நுண்ணறிவி பிரிவு கூடுதல் இயக்குநர் அரவிந்த் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்பொது தாக்குதலுக்கு ரசாயனம் கலந்த வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள், பயன்படுத்தியதாக தேசிய பாதுகாப்பு படை அளித்த முதல்கட்ட அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் சம்பவ இடத்தில் மேலும் தடயங்களை சேகரிக்க தேசிய புலனாய்வு பிரிவை அனுப்ப உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டார்.