கிராமப்புறங்களில் பாஜகவுக்கே அதிக ஆதரவு: வெற்றி பிரகாசமாக தெரிவதாக பிரபல வெளிநாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்
கிராமப்புறங்களில் பாஜகவுக்கே அதிக ஆதரவு: வெற்றி பிரகாசமாக தெரிவதாக பிரபல வெளிநாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்
By : Kathir Webdesk
பிரதமர் மோடி அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகைத் திட்டம், மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்றும், கிராமப்புறங்களில் மற்ற கட்சி தலைவர்களை விட பிரதமர் மோடிக்கே அதிக ஆதரவு உள்ளதாகவும், பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தெரிவதாகவும் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த யுபிஎஸ் என்ற புரோக்கேஜ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் 5 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்துக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.20 ஆயிரம் கோடியும், அடுத்த நிதியாண்டில் ரூ.75 ஆயிரம் கோடியையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. விவசாயிகளை அவமானப்படுத்தும் வகையில் அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.17 மட்டுமே மத்திய அரசு அளிக்கிறது என்று குற்றம் சாட்டின.
இந்நிலையில் ஸ்விட்சர்லாந்து சேர்ந்த யூபிஎஸ் நிறுவனம் மக்களவைக்கு முன்பாக கள ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ''2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது நாட்டில் மோடிக்கு ஆதரவான அலை வீசியது. ஆனால், ஆனால் இந்த முறை ஆதரவு அலையோ அல்லது எதிர்ப்பு அலையோ இல்லை .
இந்த நிலையில் பிரதமர் பதவிக்குப் பொருத்தமான தலைவர் என்று மக்களிடம் கருத்துகள் கேட்டபோது, பிரதமர் மோடிக்கான ஆதரவு அதிகமாக இருக்கிறது. மற்ற போட்டியாளர்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு மோடியைக் காட்டிலும் செல்வாக்கு குறைவாகவே இருக்கிறது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்த சூழலில், நாட்டில் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வழங்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் திட்டம் பாஜகவுக்கு நாடு முழுவதும் குறிப்பாக கிராமப்புறங்களில் பரவலான ஆதரவு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்றும் தெரிகிறது.
மேலும், நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட உள்ளூர் பிரச்சனைகளை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தால் அவர்களுக்கு சாதகமாக இருக்கலாம் என்றும், அதேசமயம், பாஜக அரசு அறிவித்துள்ள சமூக நலத்திட்டங்களின் பயன்கள், சுகாதாரம், கிராமங்களில் மின்வசதி, அனைவருக்கும் வீடு, ஸ்வச் பாரத் திட்டம் உள்ளிட்டவற்றை மக்கள் மத்தியில் கொண்டு சென்று பிரச்சாரம் செய்வது பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தும்''.என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.