ஜிஎஸ்டி வரி கணக்குகளை தாக்கல் செய்வதால் ஏற்படும் தாமதத்திற்கு அபராதம் கிடையாது! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
ஜிஎஸ்டி வரி கணக்குகளை தாக்கல் செய்வதால் ஏற்படும் தாமதத்திற்கு அபராதம் கிடையாது! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
GST கவுன்சிலின் 40-வது கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் GST நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கான மற்றும் வரி செலுத்துபவர்களுக்கு பயனளிக்கக்கூடிய சட்டக்குழுவின் பல்வேறு பரிந்துரைகள் குறித்து மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது.... ஜூலை மாதம் 2017 - ஜனவரி 2020 வரை ஏராளமான GST கணக்குகள் தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன. இதில், வருமான வரியை முழுமையாக செலுத்தியிருந்தால், GST வரி தாக்கலில் தாமதம் ஏற்பட்டாலும், அதற்கு அபராதம் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார்.
அதே சமயம், இதேக் காலக்கட்டத்தில் வரி செலுத்துவதிலும் நிலுவை இருந்து, GST கணக்கு தாக்கல் செய்யப்படாமல் இருந்தால், தாமதமாக GST செலுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.500 வரை அபராதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
ரூ.5 கோடி வரை வர்த்தகம் செய்யும் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு தாமதமாக GST தாக்கல் செய்வதற்கான வட்டி விகிதம் 9% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஜூலை 1, 2020 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டும் வட்டி விகிதம் குறைக்கப்படும். கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோருக்கு உதவ இந்த உதவி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து அமைச்சர்களின் வேண்டுகோளின் பேரில், ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ஜூலை மாதம் பிரத்யேகமாக ஒரு கூட்டம் நடத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறினார்.