புதுச்சேரி : பக்தர்களின் எதிர்ப்பை மீறி மணக்குள விநாயகர் கோவில் யானை முகமிற்கு அனுப்பப்பட்டது.!
புதுச்சேரி : பக்தர்களின் எதிர்ப்பை மீறி மணக்குள விநாயகர் கோவில் யானை முகமிற்கு அனுப்பப்பட்டது.!

புதுச்சேரியில் உலக பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமாக லட்சுமி என்ற பெண் யானை உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் விநாயகரை தரிசனம் செய்த பின்னர் லட்சுமி யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவது வழக்கம். இதனிடையே
லட்சுமி யானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமுக்கு சென்று வந்தது. அதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் கோவில்கள் எதுவும் திறக்கப்படாமல் இருந்தன. இதனால் யானை லட்சுமி வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் வழக்கமாக இருக்கும் இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் யானை லட்சுமியை வனப்பகுதி போன்று இருக்கும் குருமாம்பேட் வேளாண் அறிவியல் நிலையத்தில் வைத்து 15 நாட்கள் பராமரிக்க வனத்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த யானையை அங்கு அழைத்துச் செல்ல யானைப்பாகன்கள் தயாரானார்கள். அப்போது பா.ஜ.க., இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் யானையை இடமாற்றம் செய்வது தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இந்தநிலையில் மணக்குள விநாயகர் கோவில் யானையை வேளாண் அறிவியல் நிலையத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து மீண்டும் பா.ஜ.க., இந்து முன்னணியினர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பெரியகடை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினார்கள்.அதைத்தொடர்ந்து யானை கால்நடையாக காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு வைத்து யானையை 15 நாட்கள் பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாள்தோறும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின் கோவில்கள் திறக்கப்பட்ட நிலையில் மணக்குள விநாயகர் கோவிலில் யானை லட்சுமி இல்லாததை கண்டு பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.