"நிர்பயா பலாத்காரம் அன்று நான் ஊரிலேயே இல்லை" அண்டப்புளுகு குற்றவாளி முகேஷின் மனுவால் அதிர்ச்சியடைந்த நீதிபதி!
"நிர்பயா பலாத்காரம் அன்று நான் ஊரிலேயே இல்லை" அண்டப்புளுகு குற்றவாளி முகேஷின் மனுவால் அதிர்ச்சியடைந்த நீதிபதி!

டெல்லி மாணவி நிர்பயா பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், முகேஷ்குமார் சிங், பவன்குப்தா, வினய்குமார் சர்மா, அக்ஷய்குமார் சிங் ஆகிய நால்வருக்கும் டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இவர்கள், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நீதிமன்றத்திலும், ஜனாதிபதிக்கும் மாறி, மாறி மனு அனுப்பி வந்த நிலையில், தற்போது அனைத்தும் முடிவடைந்து நாளை மறுநாள் இவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் திகார் சிறைக்குள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி, கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தன. அந்த மனுவில், "குற்றம் நடந்தபோது நான் ராஜஸ்தானில் இருந்தேன். என்னை போலீசார் டிசம்பர் 17-ஆம் தேதி அதாவது சம்பவம் நடைபெற்ற மறுநாள்தான் கைது செய்தனர். நான் 16-ஆம் தேதி டெல்லியில் இல்லை" என இப்போது புதிதாக கூறியுள்ளான். இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளியின் பேச்சை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த நீதிபதி தர்மேந்திரா ராணா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிபதி தனது உத்தரவில், "கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், எந்தவித உணர்வுமில்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை மிக மன வலியுடன் கூறுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இதற்கெல்லாம் காரணம் விஷமத்தனமான, சுயநலமுள்ள சில வக்கீல்கள்தான். முகேஷ் சிங்கின் வழக்கறிஞரின் செயல்பாடு குறித்து வழக்கறிஞர் சங்கத்துக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'" என்றார். இதைத் தொடர்ந்து மனு தள்ளுபடி ஆனது.