ஓய்வூதியர்கள் பிரச்சனைக்கு தி.மு.க அரசு தீர்வு காணவேண்டும் என சி.ஐ.டி.யூ ஆர்ப்பாட்டம்
ஒப்பந்த காலம் நீட்டிப்பு ஓய்வூதியர்கள் பிரச்சனைக்கு தீர்வு கோரி சி.ஐ.டி.யூ ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் இன்று நடக்கிறது.
By : Karthiga
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் தலைவர் சௌந்தரராஜன், பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போக்குவரத்து ஊழியர்களுக்கு கடந்த 1977ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு ஊதியம் மற்றும் இதர பிரச்சினைகளில் தீர்வு காணப்படுகிறது. 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 31ஆம் தேதியுடன் 13வது ஊதிய ஒப்பந்தம் நிறைவு பெற்றுவிட்டது.
2019ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் கடந்த ஆட்சியில் ஒப்பந்தம் உருவாக்கப்படாததால் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலை நிறுத்தம் நடந்தது.
இந்த நிலையில் தற்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்த காலத்தை 4 ஆண்டுகளாக நீட்டித்ததில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்திற்கு உடன்பாடு இல்லை.
அதேபோல் ஓய்வுபெற்ற 85 ஆயிரம் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க மறுப்பது சரியல்ல. கோரிக்கைகள் தொடர்பாக சுமூகமான முடிவுகள் எட்டப்பட்ட நிலையில் ஒப்பந்த காலம் நீட்டிப்பும்,ஓய்வூதியர்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாததும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனை கண்டித்து இன்று மாநிலம் மமுழுவதும் உள்ள 300 பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.