வேறு எங்கும் காணக் கிடைக்காத மனித உருவில் காட்சி தரும் சிவபெருமான் எந்த ஆலயம் தெரியுமா?
பொதுவாக சிவ ஆலயங்களில் சிவபெருமான் லிங்க வடிவில் தான் காட்சி தருவார்.இந்த ஆலயத்தில் மனித உருவில் கபால மாலை அணிந்து காட்சி தருகிறார்.
By : Karthiga
ஆந்திர பிரதேசம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ளது ஹேமாவதி என்ற ஊர். முன்காலத்தில் இந்த கிராமமானது 32,000 கிராமங்களை இணைத்து ஆட்சி செய்த நூலம்ப வம்சத்தின் தலைநகராக இருந்திருக்கிறது. இங்கு பழமையான சிவன் கோவில்கள் அமைந்த வளாகம் இருக்கிறது. 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த வளாகத்தில் சித்தேஸ்வர சுவாமி ஆலயம், தொட்டேஸ்வரா கோவில், விருபட்சேஸ்வரர் கோவில் மற்றும் மல்லேஸ்வரர் கோவில் ஆகியவை இருக்கின்றன.
இங்கு சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நான்கு ஆலயங்கள் உள்ளன. இவற்றின் மூன்று ஆலயங்களில் சிவலிங்க வடிவில் காட்சி தரும் இறைவன் ஒரு ஆலயத்தில் மட்டும் மனித உருவத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அந்த ஒரு கோவில் சித்தேஸ்வர சுவாமி கோவில். இக்கோவிலில் உள்ள இறைவன் அமர்ந்த நிலையில் காட்சி தருவது எங்கும் காணக் கிடைக்காத கோலமாகும்.
நான்கு கரங்களுடன் திருசூலம் ஏந்திய படி அருளும் இந்த ஈசன் இடது காலை மடக்கியபடியும் வலது காலை தொங்கவிட்ட நிலையிலும் அமர்ந்திருக்கிறார். கழுத்தில் கபால மாலை சூடியிருக்கிறார். ஆறடி உயரம் கொண்ட இந்த சிவபெருமான் தியான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சிவபெருமானின் முகத்தில் தினமும் மாலை சூரியன் மறையும் நேரத்தில் சூரிய கதிர்கள் விழுவதை காண கண் கோடி வேண்டும். தவிர கோவில் வளாகத்தில் தொல்லியல் துறையினர் அருங்காட்சியகம் ஒன்றை அமைத்துள்ளனர் .
அதில் அழகான தெய்வ சிலைகள் பழங்கால சிற்பங்கள் போன்றவை இடம் பிடித்துள்ளன. மதகாசிராவிலிருந்து 36 கிலோ மீட்டர் தூரத்திலும் இந்துப்பூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் அனந்தபூரிலிருந்து 156 கிலோ மீட்டர் தூரத்திலும் ஹைதராபாத்தில் இருந்து 513 கிலோ மீட்டர் தொலைவிலும் விஜயவாடாவில் இருந்து 627 கிலோமீட்டர் தூரத்திலும் பெங்களூரில் இருந்து 158 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது ஹேமாவதி கிராமம்.