வரலாற்றில் முதல்முறையாக குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து ராணுவம் பங்கேற்பு-சிறப்பு விருந்தினராக அதிபர் சிசி வருகை
வரலாற்றில் முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து ராணுவம் பங்கேற்க உள்ளது. சிறப்பு விருந்தினராக அதிபர் சிசி வருகை புரிகிறார்.
By : Karthiga
வரலாற்றில் முதல் முறையாக இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டு அதிபர் சிசியும், குடியரசுதின அணிவகுப்பில் அந்நாட்டு ராணுவமும் பங்கேற்க இருப்பதாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
வட ஆப்பிரிக்க நாடான எகிப்தின் அதிபர் அப்துல் பத்தா எல்- சிசி மூன்று நாள் அரசு முறை பயணமாக வருகிற 24-ம் தேதி டெல்லி வருகிறார். இந்த பயணம் தொடர்பாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
எகிப்து அதிபர் சிசி குடியரசு தின விழாவிற்கான சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடியால் அழைக்கப்பட்டுள்ளார். மூன்று நாள் பயணமாக டெல்லி வரும் அவர் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் பங்கேற்க இருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் எகிப்து நாட்டு ராணுவ குழுவும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது.
அதிபர் சிசி தனது இரண்டாம் நாள் பயணத்தில் வரு 25ஆம் தேதி பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.