நல்லதுதான் வரவேற்கிறேன் - சரத்குமார் ஏன் அப்படி கூறினார்?
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்ட சட்டம் அமலுக்கு வந்ததை ஒட்டி பிரபல நடிகர் சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
By : Karthiga
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆன்லைன் சூதாட்டம் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கபடுத்துதல் சட்டம் அமலுக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதால் மசோதா காலாவதியான நிலையில் மீண்டும் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது .
இதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில் இப்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு அமல்படுத்தியதில் தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் விளையாட்டுகளை போலீசார் பட்டியலிட்டு வருகிறார்கள் . இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் பட்டியலிடப்பட்டிருக்கும் பந்தயம், சூதாட்டம் விவகாரங்களில் மாநில அரசுக்கு இருக்கும் சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி தடை சட்டம் பிறப்பிக்கப்பட்டாலும் நீதிமன்றங்கள் ஏற்கனவே ஆன்லைன் ரம்மியை அறிவுப்பூர்வமான விளையாட்டு என பதிவு செய்துள்ளதை கவனத்தில் கொண்டு சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும்.
மேலும் தமிழ்நாட்டில் தடை என்ற போதிலும் பிற மாநிலங்களின் பெயர்களில் பதிவு செய்து ஆன்லைன் சூதாட்டம் விளையாடும் சாத்திய கூறுகள் இருப்பதை சிந்தித்து இந்தியா முழுவதும் பந்தயம் வைத்து பணம் செலுத்தி விளையாடும் அனைத்து வித ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்வதற்கு மாநில அரசும் மத்திய அரசும் முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.