கோவில்களை முறைப்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும் - இந்து முன்னணி!
கோவில்களை முறைப்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் அறிக்கை விடுத்துள்ளார்.
By : Karthiga
இந்து முன்னணி மாநில தலைவர் கூறியிருப்பதாவது:-
கோவில் என்பது தனி நபர் சொத்து இல்லை. பக்தர்களின் வழிபடும் இடம். அதனை முறைப்படுத்த தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும். அனுமதி பெறாத சட்ட விரோத தேவாலயங்கள், மசூதி, தர்கா மற்றும் மாதா சிலைகள் இருக்கின்றன. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் அப்புறப்படுத்தப்பட்ட அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் கொஞ்சமும் தயக்கம் இன்றி கோவில்களை அதிகாரிகள் போலீஸ் துணை கொண்டு கேவலமாக எடுத்து தள்ளுகிறார்கள். அவ்வாறு இடிக்கும் போது உரிய சடங்குகளோ, தெய்வ விக்கிரகங்கள் பாலாலயமாக அமைக்கவோ முன்வருவதில்லை.
ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு கூட முறையான வழிகாட்டுதல்கள் தந்து, மாற்று இடம் தந்து , இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால் இந்து கோவிலில் வழிபாட்டு இடம் என்றால் கேட்பாரில்லை என்று நினைக்கிறது. இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது . இனிவரும் காலங்களில் இது போன்று நடக்காமல் நாகரிகமான , நியாயமான முறையில் கோவில் இடமாற்றமானது நடைபெற வேண்டும் .இவ்வாறு அவர் கூறியுள்ளார்.