கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காய்! எப்படி இது சாத்தியம்?
விவசாயி ஒருவர் தனது வீட்டு தோட்டத்தில் 1247 கிலோ எடை கொண்ட பூசணிக்காயை விளைவித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
By : Karthiga
அமெரிக்காவின் மினசோட்டாவை சேர்ந்த 43 வயதுடைய தோட்டக்கலை ஆசிரியர் ட்ராவிஸ் ஜியஞ்சர். அனோகா தொழில்நுட்பக் கல்லூரியில் நிலப்பரப்பு மற்றும் தோட்டக்கலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தன்னுடைய தந்தையால் பூசணிக்காய் (பரங்கிக்காய்) வளர்ப்பின் மீது இவருக்கு ஆர்வம் வந்ததை தொடர்ந்து, இளம் வயதில் இருந்தே பூசணிக்காயை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற 50-வது பூசணிக்காய் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
இவர் வளர்த்துள்ள பூசணிக்காய் சுமார் 2,749 பவுண்டுகள் எடையை கொண்டுள்ளது (1,247 கிலோ எடை). இப்பூசணிக்கு `மைக்கேல் ஜோர்டான்' என்று பெயரிட்டுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் கின்னஸ் சாதனையையும் படைத்திருக்கிறார்.
இதற்கு முன்பு 2021-ல் இத்தாலியில் 1,226 கிலோ எடை கொண்ட பூசணியை விவசாயி ஒருவர் விளைவித்திருந்தார். இந்த பூசணிக்காய் `அதிக எடையுள்ள பூசணிக்காய்' என்ற கின்னஸ் சாதனை படைத்தது. தற்போது 1,246 கிலோ எடையுடன் ட்ராவிஸ் ஜியஞ்சர் வளர்ந்துள்ள பூசணிக்காய் கின்னஸ் சாதனையை முறியடித்திருக்கிறது.
பூசணிக்காய் வளர்த்தது குறித்து தோட்டக்கலை ஆசிரியர் ட்ராவிஸ் ஜியஞ்சர் கூறுகையில், ``கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக பூசணிக்காயை வளர்த்து வருகிறேன். எனது வீட்டுத்தோட்டத்தில் நான் பூசணியை வளர்த்தேன். இந்த ஆண்டு பூசணி செடிகளைக் கூடுதலாக பராமரித்தேன். தண்ணீர் உறிஞ்ச உறிஞ்ச கொடுத்துக் கொண்டே இருப்பேன். நிலத்தை ஈரப்பதமாகவே வைத்துக் கொள்வேன். வழக்கத்தை விட சற்று அதிகமாகவே உரமிட்டேன்.
நான் எனது வேலையின் மூலமாக மக்களின் முகத்தில் ஒரு புன்னகையை ஏற்படுத்தியிருக்கிறேன். மேலும் இந்த நகரத்தில் உள்ள அனைவரும் இதைப் பார்க்க வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார். 2020-ல் பூசணிக்காய் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் கலந்து கொண்டிருக்கிறார். அதன்பிறகு கடைசியாக நடைபெற்ற நான்கு பூசணிக்காய் போட்டிகளில் 3 முறை இவர் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
SOURCE :vikatan.com