அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு தற்போது வரை நீடிப்பது எப்படி? பத்திரப்பதிவுத்துறைக்கு மதுரை ஐகோர்ட் சரமாரி கேள்வி
2016 ஆம் ஆண்டிலேயே சட்டத்திருத்தம் கொண்டு வந்த பின்பும் அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு தற்போது வரை நீடிப்பது எப்படி என்பது குறித்து பதிவுத் துறை தலைவர் பதிலளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கெடு விதித்துள்ளது
By : Karthiga
சட்ட திருத்தம் கொண்டு வந்த பின்பும் தற்போது வரை அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் பத்திர பதிவு செய்யப்படுவது எப்படி ?என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை தலைவருக்கு இரண்டு வார கெடுவிதிதத்து மதுரை கோர்ட் உத்தரவிட்டது. தேனி மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த சரவணன் மதுரை கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நிலத்தை அங்கீகாரம் பெறாமல் வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர் .ஆனால் தற்போது வரை அந்த நிலம் புன்செய் நிலம் என்று தான் வகைப்படுத்தப்பட்டுள்ளது. சட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கின் கடந்த விசாரணையின் போது இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் ,சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் மிதுன் சக்கரவர்த்தி ஆஜராகி தமிழகம் முழுவதும் இதே போல அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளது .அது சம்பந்தமாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.
விசாரணை முடிவில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்வது ஏற்க இயலாது. அவ்வாறு அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.எனவே கடந்த 2016 ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்ய பத்திர பதிவு சட்ட திருத்தம் கொண்டு வந்த பின்பும் தற்போது வரை அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்தது குறித்து பதிவுத்துறை தலைவர் இரண்டு வாரத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.