கல்வி நிறுவனங்களின் அருகில் எத்தனை இடங்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளன? அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு!
கல்வி நிறுவனங்களின் அருகே எத்தனை இடங்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளன என்பது பற்றி அதிகாரிகள் பதிலளிக்க மதுரை கோர்ட் உத்தரவிட்டது.
By : Karthiga
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா நற்பவளக்குடி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது :-
எங்கள் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமத்தின் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையினால் கிராம மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மது கடையுடன் பார் இருப்பதால் இங்கு மது அருந்திவிட்டு போதையில் வருபவர்கள் பாட்டில்களை சாலைகளில் உடைக்கின்றனர். பொதுமக்களுக்கு இடையூறாகவும் இருந்து வருகின்றனர். இந்த கடையை அகற்ற வேண்டும் என்று பல்வேறு மனுக்களை அதிகாரிகளிடம் அளித்திருந்தோம். பலன் இல்லை .
இந்த நிலையில் இந்த டாஸ்மாக் கடையை எங்கள் கிராமத்தின் மையப்பகுதியில் திறக்க ஏற்பாடுகள் நடக்கின்றன .குறிப்பிட்ட இடத்தின் அருகில் ஐ.டி.ஐ மற்றும் நர்சிங் கல்லூரி உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது .மேலும் அரசு பள்ளியும் உள்ளது .எனவே எங்கள் கிராமத்திற்குள் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சுரேஷ்குமார் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி மனுதாரர் தரப்பில் கூறப்படும் கல்வி நிறுவனம் தற்போது செயல்படவில்லை என்றார். அதற்கு மனதாரர் வக்கீல் ராஜராஜன் ஆஜராகி மனுதாரர் கிராமத்தின் மையப்பகுதிக்குள் அவசர அவசரமாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது என்றார் .இதை கேட்ட நீதிபதிகள் "கல்வி நிறுவனங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடையை நடத்தினால் மாணவர்கள் எப்படி கெட்டுப்போகாமல் இருப்பார்கள்? போதை பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று கூறிவிட்டு கல்லூரி அருகில் மதுபான கடையை அமைப்பது ஏன்? "என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் நீதிபதிகள் கூறுகையில் மதுபான கடை அமைப்பது அரசின் கொள்கை முடிவாக இருக்கலாம். ஆனால் அதை உள்ளூர் மக்கள் எதிர்க்கும் போது இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட நேரிடுகிறது. எனவே மனுதாரர் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர் .பின்னர் இங்கு உள்ள கல்வி நிறுவனம் செயல்பாட்டில் உள்ளதா? வேறு இடத்திலும் கல்வி நிறுவனங்களின் அருகே இது போன்ற நிலை உள்ளதா ?என்பது குறித்து அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.