கர்நாடக புதிய அரசு மேகதாது அணை கட்ட முயன்றால் போராட்டம் நிச்சயம் - அண்ணாமலை அதிரடி!
கர்நாடகாவில் அமையுள்ள புதிய அரசு மேகதாது அணை கட்ட முயன்றால் எபோராட்டம் நிச்சயம் என்று அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
By : Karthiga
சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
கர்நாடகா தேர்தல் முடிவு எதிரொலியாக திராவிட நிலப்பரப்பிலிருந்து பா.ஜ.க அகற்றப்பட்டதாக தற்போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார் . 2019 - ஆம் ஆண்டு தேர்தலில் ஏன் இதைக் கூறவில்லை? அல்லது 2018 தேர்தல் முடிந்து 104 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும்போது ஏன் அதை சொல்லவில்லை?எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியலுக்காக இந்த கருத்தை தெரிவிக்கிறார். அவருக்கு பா.ஜ.க வினர் உடைய வளர்ச்சியை பார்த்து பயம் வந்துவிட்டது.
தமிழகத்தில் பா.ஜ.க மக்கள் மத்தியில் அன்பை பெற்றுவிட்டது என்று முதலமைச்சருக்கு தெரியும் . எனவே தான் தினம் தோறும் பா.ஜ.க புராணம் பாடிக்கொண்டிருக்கிறார். பா.ஜ.க ஒரு தேசிய கட்சி .ஒரு தேர்தலில் தோற்கும். ஒரு தேர்தலில் வெற்றி பெறும் .ஆனால் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மனங்களை வென்று பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றிபெறும்.
சித்தராமய்யாவும் டி.கே.சிவகுமாரும் என்னுடைய நண்பர்கள் தான். சித்தராமையா ஆட்சியின் போது நான் எஸ்.பி.யாக இருந்தபொழுது என் மீது அதிக அன்புடன் இருப்பார் . அரசியல் ரீதியாக மட்டுமே எங்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது. கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் அது அந்த கட்சியின் முடிவு . அதில் நான் கருத்து சொல்ல முடியாது . ஆனால் நல்ல ஆட்சியை காங்கிரஸ் கொடுக்க வேண்டும் .தயவு செய்து தேர்தல் அறிக்கையில் கூறியது போல மேகதாது அணையைக் கொண்டு வந்து விடாதீர்கள்.
நீங்கள் மேகதாதுவை கொண்டு வந்தால் அதை எதிர்த்து நடக்கும் முதல் போராட்டம் பா.ஜ.க சார்பில் என்னுடையதாக இருக்கும். கர்நாடகாவில் அமையுள்ள புதிய ஆட்சிக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார். அதில் மேகதாது மட்டும் வேண்டாம் என்ற வார்த்தை உள்ளதா என்று நானும் தேடிப் பார்த்தேன் .ஆனால் அதை பற்றி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாயை திறக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.