குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய குமரி மாவட்ட வாலிபர், சுற்றிவளைத்த போலீஸ்
குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய குமரி மாவட்ட வாலிபர், சுற்றிவளைத்த போலீஸ்
By : Kathir Webdesk
கொரோனா வைரஸ் காரணமாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பித்துள்ளன. குமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. எனவே மது பிரியர்கள் மது கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மலையோர பகுதிகளிலும், வீடுகளிலும் பதுக்கி வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்துக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து கள்ள சாராயம் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மத்திக்கோடு பரம்பிவிளையைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் மகன் ராஜேஷ் ஜேக்கப் (34). இவர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கருதி தனக்கு சொந்தமான மாடி வீட்டில் ரகசியமாக கள்ளச்சாராயம் காய்ச்சி அதனை தனது காரில் கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளார்.
அவரது வீட்டை சுற்றிய பகுதியில் திடீரென சாராய வாடை வீசியதால் அப்பகுதியை சார்ந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கருங்கல் காவல் துறைஅதிகாரிகள் ராஜேஷ் ஜேக்கப் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு வெளிநாட்டு குக்கரில் சாராயம் காய்ச்சியதும், அதனை காரில் கொண்டு சென்று விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ராஜேஷ்ஜேக்கப்பை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்திய குக்கர், பழவகைகள், மது பாட்டிகள் மற்றும் 5 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.